யேர்மனியில் தண்ணீரை வீணடித்த இளைஞனுக்கு காவல்துறை கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணடித்து வந்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார், அவரை மன நல சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர்.

வடக்கு ஜெர்மனியில் உள்ள சல்ஸ்கிட்டர் பகுதியில் வசித்து வந்த 31 வயதாகும் இளைஞரின் வீட்டிற்கு தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் கட்டணம் வந்துள்ளது.

அவரது வீட்டில் ஒரு ஆண்டில் 7 மில்லியன் லிட்டர் (1.85 மில்லியன் கலோன்கள்) நீர் பயன்படுத்தப்பட்டிருந்தது.

சல்ஸ்கிட்டர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் தண்ணீர் பயன்பாடு சராசரியாக 44,000 லிட்டர்களாக இருக்கும் நிலையில், இவர் வீட்டில் 7 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது மிக மிக அதிகம் என்பதால் பொலிசார் அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டினுள் இருந்து மிக மோசமான இரைச்சல் கேட்டதை அடுத்து, பொலிசார் பூட்டியிருந்த வீட்டை மாற்று சாவி கொண்டு திறந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த இளைஞர் பொலிசார் மீது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வீசியுள்ளார். இதில் 3 பொலிசாருக்கு இலேசான காயம் ஏற்பட்டது.

உடனடியாக அந்த வீட்டுக்குள் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி இளைஞரைப் பிடித்துள்ளனர்.

வீட்டை சோதனையிட்ட போது, வீட்டின் சமையலறை, குளியலறை, கழிவறை அனைத்திலுமுள்ள குழாய்கள் திறந்த நிலையில், தண்ணீர் கொட்டியபடியே இருந்துள்ளன.

அந்த இளைஞர் வருடம் முழுவதுமே தண்ணீரை இப்படித் திறந்து விட்டிருந்தமை தெரிய வந்தது.

உடனடியாக அந்த இளைஞருக்கு மன நல சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த பொலிசார், அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்