கொக்குத்தொடுவாயில் பொதுச்சந்தை அமைப்பது தொடர்பாக முதலமைச்சரின் அமைச்சுக்கு , ரவிகரன் கடிதம்.

முல்லைத்தீவு – நாயாற்றுக்கு தெற்கே, கொக்குத்தொடுவாய் வடக்கு, மத்தி, தெற்கு, கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் மேற்கு, கிழக்கு என ஆறு கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்து இருநூறு குடும்பங்கள் வசித்துவருகின்றார்கள்.

எனினும், இங்குள்ள மக்கள் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு, ஒரு பல் பொருள் நிலையம் இங்கு கிடையாது. அது தவிர மக்கள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தக்கூடிய வகையிலும், பொருட்களை நுகர்வதற்கும் ஒரு பொது அங்காடி கிடையாது.

பெரும்பாலும் கூலித்தொழில்களையே செய்துகொண்டிருக்கும் இவர்கள் இதனால் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். பல கிலோ மீற்றர்தூரம் கடந்து, முல்லைத்தீவு நகருக்கு வந்தே தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வதோடு, தமது உற்பத்திப் பொருட்களையும் சந்தைப்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களிடம், மக்கள் முறையீடு ஒன்றை செய்தனர். மேலும் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு பொது அங்காடியை அமைத்து தருமாறு கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 04.10.2017 அன்று ரவிகரன் அவர்களால், மதிப்புறு முதலமைச்சரின் அமைச்சுக்கு குறித்த பற்றியம் தொடர்பான கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்