யாழ். இளைஞன் மீதான துப்பாக்கிச் சூட்டில் திடீர் திருப்பம்: விசாரணைகள் நிறுத்தம்!

யாழ். அரியாலை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், விசாரணைகளை இடைநிறுத்துமாறு கொழும்பு பொலிஸ் தலையகத்திலிருந்து பணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 6 நாள்களாக முன்னெடுத்த தீவிர விசாரணைகளில் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான சூழல் இருந்த நிலையில், பொலிஸ் தலைமையகத்தில் இருந்து குறித்த பணிப்புரை அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ். சிறப்பு அதிரடிப்படை முகாமை சோதனையிட நீதிமன்ற அனுமதியை பொலிஸார் நேற்றுமுன்தினம் பெற்றிருந்தபோதும், திடீரென அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தனர்.

இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையும் பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ளதால் அந்த முகாமில் விசாரணைகளை நடத்தி சந்தேகநபர்கள் இருப்பின் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்ட குழுவினரே யாழ். சென்று விசாரணைகளை முன்னெடுப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்