தமிழகள் மீது சிங்கள அரசின் சித்திரவதை இன்றும் தொடர்கிறது -வைகோ!

சிங்கள அரசின் வதை முகாம்களில் தமிழர்களை சித்ரவதைசெய்வது இன்றும் தொடர்கிறது’ என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக வைக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கொடூரத்தோடு ஈழத்தமிழ் இனப்படுகொலைக் கொடுமைகள் முற்றுப்பெறவில்லை. இன்றுவரை தொடர்கின்றது. கடந்த ஜூலை 18-ம் தேதி ஐரோப்பா கண்டத்துக்கு அடைக்கலம் தேடி வந்த ஈழத்தமிழ் இளைஞர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை இதயம் வெடிக்கத் தெரிவித்து இருந்தார்கள்.

மாதக்கணக்கில், வருடக் கணக்கில் மிகவும் இழிவான முறையில் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தி, சிங்கள அரசின் புலனாய்வுக் காவல்துறையினரும் படைவீரர்களும் செய்த கொடுமைகளால் ஏற்பட்ட மன அதிர்ச்சியால், பலமுறை தற்கொலை செய்துகொள்ளத் தாம் முடிவு எடுத்ததையும் கூறி உள்ளார்கள். இப்படி ஐரோப்பாக் கண்டத்தில் அரசியல் அடைக்கலம் தேடிவந்த 50 தமிழ் இளைஞர்கள், தற்போதுள்ள சிங்கள அரசின் ஒடுக்குமுறையைக் கண்ணீர் மல்கக் கூறி உள்ளனர். அவர்கள் கூறி இருப்பதை, ஊடகச் செய்திகளில் படிக்கும்போதே மனம் வேதனையால் பரிதவித்துத் துடிக்கின்றது.

குறிப்பாக, அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இந்தச் செய்தி அசோசியேட்டட் பிரஸ் மூலமாகப் பரவியவுடன், மனிதநேயம்கொண்ட மருத்துவர்கள், உளவியலாளர்கள், சட்ட வல்லுநர்கள், மனித உரிமை அமைப்புகள், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்குறித்துத் திட்டவட்டமான, முழுமையான நீதி விசாரணையை ஐ.நா மன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிங்கள அரசை எதிர்த்துப் போராட முனைவதாகக் குற்றம் சாட்டி, தமிழ் இளைஞர்களை வதைமுகாம்களில் அடைத்துத் துன்புறுத்தியுள்ளனர்.

இது, 2016-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை அவர்களை சிங்களக் காவல்துறையும் ராணுவமும் கோரமாக வதைத்துள்ளனர். அமெரிக்க நாட்டின் செனட் சபையின் மூத்த உறுப்பினரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான பேட்ரிக் லீகே, நடந்த கொடுமைகள் குறித்துக் குற்றம் சாட்டி உள்ளார். அசோசியேட்டட் பிரஸ் விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட இன்னொரு தமிழ் இளைஞர், தான் ஒரு சின்னஞ்சிறு அறையில் 21 நாள்கள் சித்ரவதைக்கு உள்ளானதாகவும், சிகரெட் நெருப்பால் உடலில் சுட்டனர் என்றும்; தலைகீழாகக் கட்டிவைத்து இரும்புக் கம்பிகளால் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

இன்னொரு இளைஞன், தன்னை வீட்டிலிருந்து ஐந்து பேர் கடத்திக்கொண்டுவந்து சிறையில் அடைத்து, பின்னர் சித்ரவதை அறைக்குக் கொண்டுசென்றனர் என்றும், அந்த அறையின் சுவர்கள் முழுக்க ரத்தம் தெறித்து இருந்ததைப் பார்த்ததாகவும், தனக்கும் அத்தகைய கொடுமை நிகழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளார். தங்களைத் துன்புறுத்தியவர்கள், இலங்கை அரசு காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டார்களாம்.

ஆனால், அவர்களுள் பலர் சிங்கள ராணுவச் சிப்பாய்களாகவே காணப்பட்டனராம். தெற்கு ஆப்பிரிக்காவில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநரான யாஸ்மின் சூகா, மனித உரிமைக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள், இலங்கை அரசுமீது கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்புவார்கள் என்று தான் நம்புவதாகவும், ஐக்கிய நாடுகள் மன்றம், குவாதிமாலாவில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து, சுதந்திரமான அமைப்பு விசாரணைசெய்தது போன்று, இலங்கை ராணுவத்தின்மீதும் விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெறும் எந்த விசாரணைக்கும் வருகின்ற சாட்சிகளுக்குப் பாதுகாப்பு கிடையாது என்பதோடு, மனித உரிமைகளை நசுக்கிக் கொடுமை இழைத்தவர்களே விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கின்ற அநீதியையும் சுட்டிக் காட்டுகின்றார். ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் புஜாரிக், நவம்பர் 10-ம் தேதியன்று, ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி ஊடகத்துக்கு ஒரு தகவலைத் தந்துள்ளார். ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்ட ரெஸ், ஐ.நா-வின் 193 உறுப்பு நாடுகளையும் அழைத்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட ராணுவத்தினர், ‘ஐ.நா-வின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்’ என்று கூறி யுள்ளார். ஈழத்தமிழர்களைச் சூழ்ந்துள்ள நரக இருள் எப்போது விலகும்? எப்பொழுது விடியும்? என்ற ஏக்கப் பெருமூச்சு எழுந்தாலும், மான உணர்வுள்ள தமிழர்கள், ஈழத்திலும் புலம் பெயர் நாடுகளிலும், தாய்த் தமிழகத்திலும் வீறுகொண்டு எழுந்து நீதியை நிலைநாட்டி, ஈழத்துக்கு விடுதலை வெளிச்சத்தை வழங்கும் காலம் மலர்ந்தே தீரும்’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்