கட்சிதாவிய ரவிகரனுக்கு அமைச்சு பதவி வழங்க திட்டமிடும் தமிழரசுக் கட்சி?

வடமாகாண கல்வி அமைச்சரின் அமைச்சு பதவியை பறிப்பதற்காக முழு வீச்சில் மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கல்வி அமைச்சராக உள்ள க. சர்வேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் மாகாண சபை தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராகி தற்போது அமைச்சராகி உள்ளார்.

அந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தாம் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிட மாட்டோம் எனவும் பொது கூட்டணி அமைத்து , தமிழ் தேசிய மக்கள் பேரவையின் ஆசீர்வாதத்துடன் பொது சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையிலையே தமிழ் தேசிய கூட்டமைப்பில் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளவரின் கட்சி இனி வரும் தேர்தலில் வீட்டு சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என தெரிவித்து உள்ளமையால் அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லை எனில் அவரின் அமைச்சு பதவியை பறிக்க வேண்டும் என மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சரை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

அதேவேளை கல்வி அமைச்சு பதவியை அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் இருந்து தமிழரசு கட்சிக்கு மாறிய முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனுக்கு அதனை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்