தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுப்பேன் – தினகரன் ஆவேசம்

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என தினகரன் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் சின்னத்தை பெறுவதற்காக விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு தினகரன் பேட்டி அளித்தார். அவர் அதில் தேர்தல் ஆணையத்தை மிகவும் கடுமையாக சாடி பேசி இருக்கிறார். தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

அவர் தனது பேட்டியில் ”ஓபிஎஸ் 12 எம்எல்ஏகளுடன் சென்று மனு கொடுத்த போதே அதை முடக்கி இருக்க கூடாது. அப்போது அப்படி செய்த தேர்தல் ஆணையம் ஏழு மாதங்களுக்கு பின் இப்படி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பில் எந்த விதமான நியாயமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ”இதுகுறித்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். நீதிமன்றம் மூலம் மீண்டும் நாங்கள் சின்னத்தை திரும்ப பெறுவோம்.” என்றார். மேலும் கட்சி இன்னுமும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளார்.

அதேபோல் ”நாங்கள் சின்னத்தை மட்டும் கைப்பற்றப் போவதில்லை, ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியையும் கைப்பற்றுவோம். ஆட்சி அதிகாரமும் விரைவில் எங்கள் கைவசம் வரும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்