பாகிஸ்தானில் பெஷாவர் கல்லூரியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள கல்லூரியில் தலீபான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியாகினர். துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெஷாவர் நகரில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அப்பாவி மக்கள் மீது மிருக வெறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பெஷாவரில் உள்ள விவசாய பயிற்சி கல்லூரியில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு 3 பயங்கரவாதிகள் பர்தா அணிந்தவாறு ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வந்து இறங்கினர்.

அவர்கள் முதலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை சுட்டு வீழ்த்தி விட்டு அந்தக் கல்லூரி விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அங்கிருந்த மாணவர்கள் நாலா புறமும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தவில்லை.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தலீபான் பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

ஆனாலும் இந்த தாக்குதலில் 8 மாணவர்கள், ஒரு ஊழியர் என 9 பேர் பலியானதாகவும், 36 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர். இதை பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவின் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் உறுதி செய்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்