ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் தரப்பு குக்கர் அனைத்து கட்சிகளின் பிரஷரையும் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது என உளவுத்துறை அளித்திருக்கும் தகவல் கோட்டைவாசிகளை ரொம்பவே அதிர வைத்திருக்கிறதாம்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலையும் குக்கரும் பணத்தை வாரி இறைப்பதில் சளைக்கவில்லை. குக்கர் தரப்பு எவ்வளவு பணம் தருகிறார்களோ அதே அளவுக்கு தருவது என இரட்டை இலை தரப்பு வரிந்து கட்டுகிறது.
ஆனால் குக்கர் தரப்பின் ஆர்.கே.நகர் தொகுதி பொறுப்பாளரோ வேறு ஒரு கணக்கை அடையாறு தலைமைக்கு சொல்லியிருக்கிறார். அதாவது ஏப்ரல் மாதம் நாம் கொடுத்த பணத்தையே வாக்காளர்கள் இன்னும் மறக்கவில்லை. அதைவிட கொஞ்சம் கூடுதலாக கொடுத்தாலே நாம்தான் ஒரு ஓட்டுக்கு இரட்டை இலக்கமாக கொடுத்தவர்களாக கருதுகிறார்கள்.
அந்த நம்பிக்கையில்தான் நீங்கள் போகும் இடமெல்லாம் கூட்டம் அள்ளுகிறது. கூட்டத்துக்கு அழைத்து வந்தால் ஒரு காசு, குக்கர் கோலம் போட்டால் காசு, ஓட்டுக்கு தனி காசு என பணமழையில் திக்கு முக்காட வைத்துக் கொண்டே இருந்தால் கடைசி நிமிடம் வரை வேறு பக்கம் அவர்கள் சாயவே மாட்டார்கள். தினமும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தொகை சென்று கொண்டே இருக்குமாறு பார்த்தாலே போதும்… எளிதாக வாக்குகளை வெல்லலாம் என கூறியிருக்கிறார்.
அடையாறு தலைமையும் கூட, மூச்சு முட்ட பணத்தை கொட்டினால் மற்றவர்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்தான்.. இதுதான் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகும் தேர்தல்… எந்த எல்லைக்கும் போங்கள் என கறாராக சொல்லிவிட்டதாம். ஆனால் இரட்டை இலை தரப்போ, ஓட்டுக்கு இவ்வளவு என்கிற கணக்குடன் நிற்கிறதாம். இது பெரிய அளவு வாக்காளர்களிடம் எடுபடவில்லையாம்.
மற்ற கட்சிகளும் இன்னும் வைட்டமின் ‘ப’வை களத்தில் இறக்கவில்லை. இதனால் தற்போதைய நிலையில் குக்கர் தரப்புதான் பிரஷரை எகிற வைக்கிறது… இப்படித்தான் உளவுத்துறை அறிக்கையில் இருக்கிறதாம்.
இது தொடர்பாக விவாதித்த கோட்டைவாசிகளோ, இப்படியெல்லாம் வாரி இறைத்தால் சரிப்படாது… பேசாம தேர்தலையே ரத்து செய்துவிட்டுப் போகிற மாதிரி நடந்து கொள்ள வேண்டியதுதான்..என்கிற ரேஞ்சில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்களாம்.