பருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடு கரையொதுங்கியுள்ளது!

பருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடொன்று கரையொதுங்கியுள்ளது.மூங்கிலால் கட்டப்பட்ட தளத்தில் அமைக்கப்பட்ட சிறு வீடு ஒன்று இன்று காலை கடலில் மிதந்து வந்துள்ளது. இதனைக் கண்ட பருத்தித்துறை சுப்பர்மடத்தை சேர்ந்த மீனவர்கள் கரைக்கு கட்டி இழுத்து வந்துள்ளார்கள்.

இந்த மூங்கில் வீட்டில் தாய்லாந்து கொடி கட்டப்பட்டிருந்ததாக கரைக்கு இழுத்து வந்த மீனவர் தெரிவித்துள்ளார். இந்த மூங்கில் வீட்டை பார்க்கும் போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களின் பிதிர் வழிபாட்டிற்காக உருவாக்கப்பட்டதாக தென்படுகிறது.

மூங்கில் தளத்தில் அமைக்கப்பட்ட சிறு குடிலின் நடுவே விசேடமாக தயார் செய்யப்பட்ட கிண்ணம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி அரிசி உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள் சிதறிக்காணப்படுகிறது. அத்துடன் அதன் முன்பாக மெழுகுதிரி ஏற்றிவைக்கப்பட்டதற்கான அடையாளமும் காணப்படுகிறது.��இவற்றை வைத்து பார்க்கையில் இறந்த தமது முன்னோர்களின் பிதிர் கிரியைகளை செய்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை கிண்ணத்தில் இட்டு கடலில் மிதக்க விட்டுள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

இந்த மூங்கில் வீடு கரையொதுங்கிய செய்தியை கேள்விப்பட்டவர்கள் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.

ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்