பாராளுமுன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு நகரில் இன்று புதன்கிழமை பிற்பகல் முறாவோடை பிரதேச மக்களினால் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.மட்டக்களப்பு முறாவேடை பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெற்றுவருவதாக மக்கள் போராட்டம் நடாத்திவரும் நிலையில் அதற்கு எதிரான கருத்துகளை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இன்று புதன்கிழமை (16-08)பிற்பகல் 4.00மணியளவில் மட்டக்களப்பு நகரின் காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான கோசங்களை ஏழுப்பியதுடன் அவரது உருவபொம்மையினையும் எரித்தனர்.

முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் நிகழ்வொன்றில் முன்னர் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குறித்த பாடசாலை காணி வேறு ஒரு இனத்தவரினால் அபகரிக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று அக்கருத்துக்கு மாறுபட்ட கருத்தினை அவர் தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தமது பகுதியிலேயே நடக்கும் பிரச்சினை என்னவென்று தெரியாமல் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வேறு பகுதிகளில் நடைபெறும் பிரச்சினைகளை எவ்வாறு பார்க்கப்போகின்றார் எனவும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்