ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு

தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை நீடித்து வந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் இயல்புநிலையை கொண்டுவர பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை அமைதி குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் பேசியதாவது, ஆலையை மூடவே மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் படுகாயம், 83 பேர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையில் 29 ஆண் காவலர்களும் , 10 பெண் காவலர்களுக்கும் காயமடைந்துள்ளனர்.

1.27 கோடி ரூபாய் மதிப்பிலான 110 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மீண்டும் இயல்புநிலையை கொண்டுவருவதே நோக்கம். மதுரையில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படும்.

இயல்பு நிலை திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். ரேஷன் கடைகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் முக்கிய கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காகவே மின்சாரம், குடிநீர் சேவை நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இனி மக்கள் தூத்துக்குடியில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்