கிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்று மேற்கொள்ளப்பட்டதாக சிறுவர் நன்னடத்தை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – கரைச்சி கல்வி கோட்டத்திற்குட்பட்ட, பாரதிபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவரை அப்பாடசாலையில் கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் ஒருவர் நேற்று பாடசாலை நேரத்தில் தகாத முறையில் முற்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பாடசாலைக்கு சென்ற மாணவி குறித்த ஆசிரியரின் பாடத்திற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவம் தொடர்பில் வகுப்பாசிரியரிடமும் அவரது பெற்றோரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த முறைப்பாடு தொடர்பில் பெற்றோர் பாதிக்கப்பட்ட மாணவி, மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் வலயக் கல்விப்பணிப்பாளருக்கு தெரிவித்திருப்பதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று காலை 10 மணிக்கு பாடசாலைக்கு சென்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.