தமிழீழ தேசம் சுதந்திரம் அடையும் வரை போராடியே தீருவோம் – ஐநா நோக்கிய மனிதநேயப் பயணங்கள் சுவிஸ் சென்றடைந்தது.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் (13.09.2018) காலை அகவணக்கத்தோடு ஆரம்பித்து Mulhouse மாநாகரசபையினை வந்தடைந்தது . தொடர்ந்து மாநகர சபை உறுப்பினரிடம் மனு கையளிக்கப்பட்டு, Mulhouse மக்கள் தேசியத்தலைவரின் நிழல்படம் கொடுத்தும் வரவேற்றனர்.

தொடர்ச்சியாக பயணித்து மாலை நேரம் சுவிஸ் நாட்டை சென்றடைந்து பாசல் மாநிலத்தில் மக்கள் வரவேற்போடு அம்மாநில மக்களோடு கலந்துரையாடி இனிதே நிறைவு பெற்றது. இன்று காலை Bern மாநிலத்தில் உள்ள பாராளுமன்ற முன்றலை நோக்கி தொடர இருக்கின்றனர்!

தமிழ் வான் கண்காட்சி ஊர்திப்பயணம் நேற்றைய தினம் யேர்மனியின் மத்தியமாநிலத்தில் உள்ள Düsseldorf நகரில், மக்கள் அதிகமாக நடமாடும் நகரமத்தியில் நடைபெற்றது. இக் கவனயீர்ப்பு நிகழ்வுற்கான ஒழுங்குகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி ஒழுங்கமைத்துத் தந்திருந்தனர். இளையோர்கள் துண்டுப்பிரசுரம் வழங்கி வேற்றின மக்களுக்கான விளக்கங்களை எடுத்துரைத்தனர். தமிழ் வான் கண்காட்சி ஊர்தி தனது பயணத்தை தற்போது பேர்ண் நகரை நோக்கி தொடர்கிறது.நாளைய தினம் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப்பயணம் இத்தாலி நாட்டுக்கும் பயணித்து திங்கள் ஜெனீவா சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம் செல்லும் வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.அரசியல்
சந்திப்புகளில் பின்வரும் கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவும் கையளிக்கப்பட்டது .

1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று 14.09.2018 கனடா தேசத்திலும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் கவனயீர்ப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அந்தவகையில் எமது சுதந்திர இலட்சியம் நிறைவேறும்வரை எமக்குக் கிடைத்த வழிகளில் நாம் தொடர்ந்து போராடுவோம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்