மீண்டும் இராணுவத்தின் பேரால் மண் கடத்தல்!

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியிலிருந்து ஆலயங்களுக்கு வழங்கவென படையினர் எண்ணூறு கியூப் மணலை திருடி செல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.குடத்தனை பகுதியிலிருந்து படையினரது ரிப்பர் ரக வாகனங்களில் ஏற்றப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டு வருவதாக குடத்தனை மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே தாம் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்ற போதும் தம்மை இராணுவத்தின் இணைப்பாளராக கூறிக்கொள்ளும் நெய்தல் கண்ணன் மறறும் மருதங்கேணி பிரதேச செயலாளர் ஆகியோர் மிரட்டியே மணலை கொள்ளையிடுவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை ஆலயங்களிற்கென்ற பெயரால் கொண்டு செல்லப்படுகின்ற மணல் தனியார்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறதாகவும் இராணுவம் நெய்தல் கண்ணன் ஊடாக செய்கின்ற இம் ஊழல்களுக்கு தாம் அஞ்சுவதாகவும் மக்கள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம் மணல் அகழ்வு பணி தொடர்பில் விமர்சிப்பவர்களை கண்ணன் நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் மிரட்டி வருவதாகவும் குறிப்பிடுவதுடன் அவ்வாறு ஆலயங்களின் பெயரால் கொண்டு செல்லப்படுகின்ற மணலிற்கு அனுமதி பத்திரமோ வழி அனுமதி பத்திரமோ அல்லது மத்திய சுற்றாடல் அதிகார சபை கனிய வளங்கள் மற்றும் புவி சரிதவியல் திணைக்கள உரிமமோ எதுவுமின்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நடவடிக்கைக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர்,செயலக அதிகாரி நேரில்இப்பணிகளை செயற்படுத்த உதவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குடத்தனை வட்டார உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தியாகலிங்கம் அவர்களை வினவியபோது தான் எவ்வளவோ முயற்சி செய்தும் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளரும் மண்கடத்தலிறகு உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மணல் அகழ்வில் பல்வேறு ஊழல்கள் நிகழ்வதாக பருத்தித்துறை பிரதேச சபை தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.உண்மையில் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அம் மணல் அகழ்வால் குறிப்பிட்ட சில வருடங்களில் அப் பிரதேசத்தில் பெரிய சூழல் பாதிப்புகள் நிகழும் எனவும் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்