யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி, சார்பில் இந்த மனு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் 51-2 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 120 ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

இந்த மனு நேற்று யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்வரன் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, யார் மீதாவது குற்றம்சாட்டுகிறீர்களா என்று நீதிவான் கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறையினர் இல்லை என்று பதிலளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த மனு மீது, நாளை வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்