கொழும்பு மோதரைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தனர்.
நேற்று புதன்கிழமை காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், கொழும்பு மோதரை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் நால்வர்; படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சை பயனின்றி ஒருவர்; உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மோதரை ஹேனமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய தினேஸ் எரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்த பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுனராக பணிப்புரிந்து வந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் இவரே இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
உந்துருளிகளில் வந்த இருவரே மேற்படி துப்பாக்கிச் சூட்டை நடத்தி தப்பிச்சென்றுள்ளனர். இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த மோதலே சம்பவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை கொழும்பு புளுமெண்டல் சங்கா தலைமையிலான பாதாள உலகக் குழுவே நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது – என்று தெரிவித்துள்ளது. சம்வபவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு கிராண்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை குடாவெல்ல மீன்பிடித்துறை முகத்தில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.