புத்தாண்டில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும்: வாசுதேவ

2019 ஆம் ஆண்டில் அரசாங்கம் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் எதிர்ப்பார்க்கும் சலுகைகளை இந்த அரசாங்கத்தால் வழங்க முடியாதுள்ளது. நாளுக்கு நாள் நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

அடுத்த வருடம் என்பது தேர்தல்களுக்குத் தயாராகும் ஒரு வருடமாகவே இருக்கிறது. மறுபுறத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.

இவ்வாறு பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இந்த அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உடனடியாகப் பொதுத் தேர்தலுக்குச் செல்வது மட்டுமே அரசாங்கத்துக்கு இருக்கும் ஒரே வழியாக இருக்கிறது.

ஆனால், தேர்தலை நடத்தாமல் இருக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஊடகங்களுக்கும் மிரட்டல் விடுக்கிறது. ஜனநாயகத்தை வென்று விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் மார்த்தட்டிக்கொள்கிறார்கள்.

எனினும், மக்கள் ஆணைக்கு எதிராக நீதிமன்றத்தின் தீர்ப்பையே இவர்கள் வென்றுள்ளார்கள் என்பதுவே உண்மையாகும்.

இந்த நாட்டில் இன்று ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாது போயுள்ளது. ஜனநாயகம் தொடர்பில் அனைத்துத் தரப்பிடமும் கேள்வி எழுந்துள்ளது.

இதனாலேயே, மக்கள் அனைவரும் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் வலியுறுத்துகிறார்கள். இதனை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்