யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு! சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த உத்தரவு

யாழில் பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக்குழுவினைச் சேர்ந்த 7 நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் இருவர் மீது ஆவாக்குழுவினைச் சேர்ந்த நபர்கள் சாரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டிருந்தனர்.
வாள்வெட்டிற்கு இலக்காகிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிஸ் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினர், விசேட அதிரடிப்படையினரின் தீவிர தேடுதலின் பின்னர், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவாக்குழுவினைச் சேர்ந்த பிரதான நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், பயன்படுத்திய வாள், மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட வாள்கள் மற்றும், மோட்டார் சைக்கிள்களுடன் 7 சந்தேக நபர்களும் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் இன்றையதினம் (22.08) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்துமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டு, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்