அன்னை பூபதியின் 32ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆரப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசுவாமி கோயிலில் ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட பேரணி வவுனியா மணிக்கூட்டு கோபுரம் வழியாக அஞ்சல் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல்போன உறவுகளினால் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை வந்தடைந்தது.
இதன்போது காணாமல்போனவர்களின் உறவினர்கள் அன்னை பூபதியின் நினைவேந்தல் பதாதையை தாங்கியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறும் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் காணாமல்போனவர்களினால் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காணமல்போனோரின் உறவுகளால் வவுனியாவில் சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 790ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.