நான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருக்கவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். அந்த வகையில் தான் பரப்புரை நிகழ்வுகளில் நான் பங்கேற்கிறேன். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது சகோதர வேட்பாளர்களுடனும் சேர்ந்து இயங்கவே விரும்புகிறேன். இது தொடர்பாக கட்சித் தலைமைக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

ஆயினும் நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மட்டுமே ஆதரவாக பிரச்சாரம் செய்வது போன்ற பிம்பத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் சுமுகமான உறவை சிதைக்க முயற்சிப்பது ஆரோக்கியமற்ற ஒரு விடயமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களின் பெண் வேட்பாளர் என்ற வகையில் கட்சியின் மகளிர் அணி உட்பட சகல பெண்கள் அமைப்புகளின் ஆதரவை கோரும் எனக்கு சிலர் தடையை ஏற்படுத்துவது வேதனை அளிக்கிறது. பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த ஒருத்தியை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுவது வேதனை தரும் விடயமாகும். இது எனக்கு மட்டுமல்ல என்னை பின் தொடர்ந்து வரும் பெண் அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும். அத்தோடு, எனக்கு ஆதரவு அளிக்க நினைக்கும் பெண்களுக்கும் இது ஒரு சவாலாக காணப்படுகிறது.

தமிழ்த் தேசிய நீக்க அரசியலை ஊக்குவிக்கும் முகமாக எந்த கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை. தென்மராட்சி எனது மண் நான் அந்த மண்ணில் பிறந்தவள்; என் மக்களை சுதந்திரமாக சந்தித்து கலந்துரையாடுகிறேன். அவர்கள் குறைகளை அறிந்து கொள்கிறேன். அவற்றை நிவர்த்தி செய்ய விரும்புகிறேன். எப்போதும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.

பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறோம்; பெண்களை மதிக்கிறோம் என்று பேசுபவர்கள் உண்மையில் பெண்களை சுயாதீனமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கும் சசிகலாவிற்கு கடுமையான முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தெரிந்ததே.

About இலக்கியன்

மறுமொழி இடவும்