அலெக்ஸிக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த்தாக கூறப்படும் இளைஞரிற்கு நீதி கோரி வட்டுக் கோட்டைச் சந்தியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது;
கடந்த வாரம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்த அலெக்சாண்டர் என்ற இளைஞர் மிகக் கொடூரமான முறையிலே சித்திரவதை செய்யப்பட்டு அடித்து படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற சம்பவத்தை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உயிரிழந்த இந்த இளைஞரும் அவரது குடும்பத்தவர்களும் சமூகத்திலே மிக மதிப்போடு வாழ்ந்து வந்தவர்கள். ஆனால் பொலிஸார் சமூகத்திலே தாங்கள் செய்கின்ற சமூக விரோத செயற்பாடுகளை மூடி மறைப்பதற்காக அப்பாவிகளை கைது செய்து அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டு அவர்கள் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தச் சம்பவத்திலே சம்பந்தப்பட்ட பொலிஸார் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு தான் வருகின்றார்கள் .

குறிப்பாக யுத்தம் நடைபெற்ற காலங்களில் இருந்து இராணுவத்தோடு சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், யுத்த குற்றங்கள், இனப்படுகொலைகள் போன்ற சம்பவங்களிலே இந்தக் காவல்துறையினரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இந்த நாட்டில் எந்தவிதமான நீதி விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

ஏனெனில் அவர்கள் யுத்தத்தின் இறுதியில் வெற்றி பெற்றிருக்கின்ற நிலைமையிலே தாங்கள் செய்த படுகொலை மனநிலையோடு தான் தொடர்ந்தும் காவல்துறை என்ற கடமைக்குள் இருந்து கொண்டு வடக்கு கிழக்கிலே தொடர்ந்தும் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் தமிழர்கள் மீது ஈவிரக்கம் இல்லாத தாக்குதல்கள் சித்திரவதைகளை நடத்துவதும் காவல்துறையின் வழமையான நடவடிக்கையாக இருக்கின்றது.

ஆகவே காவல்துறையினரின் இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். யுத்த காலத்திலேயே இனப் படுகொலையோடு சேர்ந்து செயல்பட்ட பங்காளர்களான காவல்துறையினர் வடகிழக்கிலே பல உயர் பதவிகளில் இருக்கின்ற போது அவர்களுக்கு கீழே செயல்படுகின்றவர்களும் புதிதாக சேர்ந்து கொள்பவர்களும் அது தமிழர்களாக இருந்தாலும் கூட அவர்களுடைய மேலதிகாரிகளின் மனநிலைக்கு உள்வாங்கப்பட்டு சாதாரண தமிழ் மக்களை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்கின்ற வக்கிர மனம் கொண்டவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
.
ஆகவே இந்த முறைமை முற்றாக மாற்றப்பட வேண்டுமாக இருந்தால் எங்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலைக்கு முழுமையான சர்வதேச விசாரணையொன்று நடைபெற்று ராணுவத்தினர் மட்டுமல்ல இந்த இனப்படுகொலையோடு தொடர்பட்ட காவல்துறையினரும் தண்டிக்கப்படுகின்ற பொழுதுதான் காவல்துறையினர் மனிதர்களை நேசிக்கின்ற ஒரு சூழல் உருவாகும் இல்லையென்றால் மனிதர்களை வேட்டையாடுகின்ற இனவெறி பிடித்தவர்களாக இருப்பார்கள்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் உயர் பதவிகளில் இருக்கின்றதால் தமிழ் மக்களுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் இனவெறி மனப்பாங்கு கொண்டவர்களாகவும் மதவெறி மனப்பாங்கு கொண்டவர்களாகவும் பல இடங்களில் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

இதேவேளை கடந்த வாரம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கூட அப்பாவிகளை கைது செய்து பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மிக மிக கொடுரமான சட்டத்தின் கீழ் வழக்குகளை கூட பதிவு செய்திருக்கின்றார்கள்.

மிக மிக கொடூரமான சட்டத்தின் கீழ் தான் இவர்களுக்கு எதிரான வழக்குகளை பதிவு செய்து இருக்கின்றார்கள். அதற்கு காவல்துறையினரின் இனவெறி மனநிலை மற்றும் வக்கிர மனநிலை தான் காரணமாக இருக்கின்றது.

ஆகவே இதற்கு எதிராக நாங்கள் எல்லோரும் ஒன்று திரண்டு போராடினால் மட்டும்தான் அப்பாவிகளுடைய இருப்பையும் உயிர்களையும் நாங்கள் பாதுகாக்க கூடியதாக இருக்கும். அதற்காக நாங்கள் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்