கிளைமோர் தயாரித்தார்கள் என முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது

கிளைமோர் குண்டு தயாரித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் முன்னாள் போராளியை மேலதிக விசாரணைக்கு என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளனர். மற்றையவர் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான ஆரோக்கியநாதன் சவேரியன் (வயது 48) என்பவரும் அவருக்கு உதவியதாக நாச்சிகுடா பகுதியை சேர்ந்த தம்பு குணசேகரம் (வயது 63) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நாச்சிகுடா பகுதியில் தம்பு குணசேகரன் , படகுகள் ஒட்டு (பைவர்) வேலைகள் செய்யும் சிறிய தொழிற்சாலையை நடாத்தி வருகிறார். அவரது தொழிற்சாலைக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , கிளைமோர் மூடிகளை ஒத்த பிளாஸ்டிக் (பைவர்) பொருட்களையும் , அதனை செய்வதற்கு பயன்படுத்திய அச்சுக்களையும் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஜோன்சன் என்பவர் , தொங்கும் பூச்சாடிகளை செய்து தருமாறு கூறி, தன்னிடம் இந்த அச்சுக்களை தந்ததாகவும் , அதனையே தான் வார்த்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் போராளியான ஜோன்சனை கைது செய்து , மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதேவேளை , ஜோன்சன் சிவில் பாதுகாப்பபு திணைக்களத்தில் பணியாற்றி வருபவர் எனவும், மாவீரர் வாரத்தில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வினை முன்னிட்டு நடத்தியவர் எனவும் , அதனை தொடர்ந்து அவரை பற்றி புலனாய்வாளர்கள் ஊரில் பலரிடம் விசாரித்து தகவல்களை சேகரித்தனர் என ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்