சபாநாயகர் ஒரே விவகாரத்தில் இருவேறு விதமாக நடந்து கொண்டதை சுட்டிக் காட்டி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தினகரன் தரப்பு ஹைகோர்ட்டில் வாதம் முன்வைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என்று தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்த நிலையில், அதில் ஜக்கையன் மட்டும் பிறகு எடப்பாடி தரப்புக்கு ஆதரவு அளித்து சேர்ந்து கொண்டார்.
இந்த நிலையில், 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து அவர்கள் சார்பில் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் சபாநாயகர் இந்த தகுதி நீக்க உத்தரவை பிறப்பித்தது செல்லாது என்பது தினகரன் தரப்பினரின் முக்கிய வாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் சபாநாயகர் நடவடிக்கை குறித்தும் வாதம் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளது.
முன்பு எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவந்தபோது அதிமுக கொறடா உத்தரவை மீறி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வெண்ணை போன்று திரண்டு வந்த வாய்ப்பு அது. ஆனால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேநேரம், இப்போது சட்டசபைக்குள் அதுபோன்ற எந்த ஒரு எதிர்நிலைப்பாட்டையும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடுக்கவில்லை. ஆளுநரிடம்தான் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதை கொறடா உத்தரவு கட்டுப்படுத்துமா என்ற கேள்வி சட்ட வல்லுநர்களுடையது. இப்படி இருந்தும் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது சபாநாயகரின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது என்பது தினகரன் தரப்பு வாதமாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் இன்னொரு விவகாரமும் உள்ளது. எங்களை தகுதி நீக்கம் செய்யும் முன்பு பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவர் தரப்பு எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தினகரன் தரப்பு வாதிடக் கூடும் என்று தெரிகிறது. அப்படி வாதம் முன்வைத்தால் அது அரசியலில் புது திருப்பத்தை ஏற்படுத்தும்.

