ஐநா தீர்மானங்கள் அனைத்தையும் செய்வோம், ஆனால் வேகமாகச் செய்யமுடியாது – மைத்திரி உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை உரையாற்றினார்.

அவ்வுரையில், போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களை விரைவாகச் செய்யமுடியாது எனவும் மெதுவாகவே அவற்றினை நிறைவேற்றமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உரையில் தெரிவித்திருப்பதாவது,

30 வருட யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் விரைவாக செய்து முடிப்பது இயலாத காரியம் என சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள், பிரேரணைகள் தொடர்பில் ஒரு சமாதானம் மிக்க நாடென்ற வகையில் நிதானமான பயணத்தின் மூலம் தெளிவான இலக்கை எட்ட சர்வதேசதத்தின் ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாகவும் அவர் ஐ.நா பொதுச் சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் விசேட உரையாற்றிய சிறீலங்கா ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதி தனது உரையில் “யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு முன்னுரிமை அளித்து நாம் செயற்படுகின்றோம்.

யுத்தகாலத்தில் நிலவிய சூழ்நிலை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கின்ற முன்மொழிவுகள் பற்றி அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதோடு, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

30 ஆண்டு கால போருக்கு முகம்கொடுத்த நாட்டில் 2015ஆம் ஆண்டு தான் ஆட்சிக்கு வரும்போது முதன்மைப் பிரச்சினைகள் இரண்டு இருந்தன.

வரையறையற்ற வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய நிலையில் பாரிய நிதிப்பற்றாக்குறை இருந்தமை முதலாவது பிரச்சினை என்பதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை இரண்டாவது சவால்கள்.

எனினும் குறிப்பான தேசிய பொருளாதரத்தை பலப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார சுபீட்சத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்கள் ஊடாக வெளிநாட்டு கடன்களிலிருந்து விடுபடும் இலக்கை நோக்கி ஸ்ரீலங்கா பயணித்துக் கொண்டிருக்கின்றது.

பல்வேறு மொழி பேசும், மதங்களைப் பின்பற்றும் அனைவரிடமும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்பி சந்தேகம், நம்பிக்கையீனம், பழிதீர்க்கும் உணர்வு மற்றும் குரோதத் தன்மையினை நீக்கி அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் பாடுபடும்.

சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நியாயமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைச் செயற்பாட்டுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

ஜனநாயகம் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பலப்படுத்தி சர்வதேசத்தின் நற்பெயரைப் பெற்றுக்கொண்டு விலகியிருந்த நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தி மிகச்சிறந்த அரசாட்சியை முன்னெடுக்கும் இந்த நேரத்தில், எமது நாட்டைக் கட்டியெழுப்பி முன்னேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

62 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமவாயங்கள் உடன்படிக்கைகள் ஒழுங்குவிதிகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட்டு வரும் ஸ்ரீலங்கா, ஐ.நாவின் அனைத்துத் தீர்மானங்களுக்கும் உறுப்பு நாடென்ற ரீதியில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது கடப்பாடுகளை நிறைவேற்றியுள்ளது.

நாட்டின் சுயாதீனத் தன்மை மற்றும் இறைமை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை நாடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள், பிரேரணைகள் தொடர்பில் ஒரு சமாதானம் மிக்க நாடென்ற வகையில் நிதானமான பயணத்தின் மூலம் தெளிவான இலக்கை எட்ட சர்வதேசதத்தின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

சில கடும்போக்காளர் துரிதமான பயணத்தையும், தீர்வுகளையும் எதிர்பார்க்கின்றனர்.

எனினும் 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்பி அன்புக்குரிய நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

நிதானமாகச் செல்லும் காத்திரமான பயணத்திற்காக அனைவரினதும் ஒத்துழைப்பையும் நல்க வேண்டும்.

நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாப்பதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த இரண்டரை வருடங்களாக ஜனநாயக ரீதியிலான ஆட்சி முறையினை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜனநாயகத்தை பாதுகாத்து போசிக்கும் நாடுகளில் ஆட்சிக்குவரும் தலைவர்கள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் அதிகாரத்தை உரியவாறு பயன்படுத்துவதற்கும், நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தமது அதிகாரத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

ஆயினும் கடந்த பல தசாப்தங்களாக உலக வரலாற்றை நோக்கும்போது பல தலைவர்கள் அதிகாரத்திலிருந்து விலகிச் செல்ல விரும்பாமை காரணமாக அந்த நாட்டின் சமாதானம் சீர்குலைவதுடன் அது சர்வதேச ரீதியிலான பல்வேறு விதமான பிரிவுகளுக்கும் கரணமாக இருப்பதனைக் காணமுடிகின்றது.

அவ்வாறான வரலாற்றுத் தகவல்கள் பற்றிய, உள்நாட்டு வெளிநாட்டு ஏராளமான அனுபவங்கள் எமக்கு இருக்கின்றன.

அவ்வாறான நிலைமையில் எனது நாட்டில் ஜனநாயக்தை உறுதிப்படுத்தி ஏகாதிபத்திய அரசியலை கொண்டுநடத்திய அரசியல் குழுக்களை அகற்றி நாட்டில் மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயக்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்து அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளேன்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நிலவிய உள்நாட்டுப் போர், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாட்டைப் பிரிப்பதற்கான போராட்டத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க எம்மால் முடிந்துள்ளது.

எனது நாட்டு சனத்தொகையில் நூற்றுக்கு 52 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாவார். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென்பதனை எமது புதிய அரசியல் திருத்தச்சட்டத்தில் கட்டாயப்படுத்தியிருக்கின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்