அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும் -ருத்திரன்

ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்கள், நிபுணர் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்து பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேசியிருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட கையுடன் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கமும் இணை அணுசரணை வழங்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. அந்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தாப்படாத நிலையில் மீண்டும் இவ்வாண்டு இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால நீடிப்பும் வழங்கப்பட்டிருந்தது. சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த நெருக்குவாரத்தை மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் தளர்த்தியுள்ளதுடன், சர்வதேச சமூகத்தின் அபிமானதிதைப் பெறுவதற்கும் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. அரசாங்கம் தனது இந்த நகர்வுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடனான உறவையும் சரியாக பயன்படுத்திக் கொண்டது.

இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா விசேட குழுவினர்கள் வெளியிட்ட அறிக்கைளின் அடிப்படையில் ஐ.நாவின் மனிதவுரிமை ஆணையாளர் செயிட் அல்ஹுசைன், கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது. சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருத்திருகிறார். இதனையடுத்து வலிந்து காணாமல ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான வர்த்தகமானி அரசாங்கத்தால் உடனடியாகவே வெளியிடப்பட்டுள்ளது. மனிதவுரிமை ஆணையாளரின் கடும் தொனியுடளான உரையை அடுத்து அவசர அவசரமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகச் செயற்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பாகி> தென்பகுதியில் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்திற்கு பயந்து மீண்டும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கால அவகாசம் வழங்கி 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஐ.நா குழுவினர் இலங்கையின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டியும், தமது காணிகளை விடுவிக்கக் கோரியும் ஆரம்பித்த போராட்டங்கள் இன்று 200 நாட்களைக் கடந்தும் தொடர்கின்றது. அந்த போராட்டங்களை முடித்து வைப்பதற்கோ அல்லது அந்த மக்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ மைத்திரி – ரணில் அரசாங்கம் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் இதய சுத்தியுடன் முன்னெடுக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இந்த விடயத்தில் காத்திரமாக செயற்பட்டதாக தெரியவில்லை. ஐ.நாவின் அதிருப்தியையடுத்து தமக்கு வழகங்கப்பட்ட கால எல்லைக்குள் வழங்கிய வாக்குறுதிகளை செய்வோம என புதிய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவுள்ளார். இந்நிலையில் இழுபறியில் இருந்த புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையும் பாராளுமன்றத்திற்கு வர இருக்கின்றது. அரசாங்கத்தின் இத்தகைய நகர்வுகளின் பின்னனியில் சர்வதேச அழுத்தம் இருப்பதை மறுத்து விட முடியாது.

இலங்கைத் தீவுவைப் பொறுத்தவரை தமிழ் தேசிய இனம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளின் சிந்தனைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாகவும், ஓடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். தமிழ் தேசிய இனமும் இந்த நாட்டில் சமத்துவமாகவும், சகல உரிமைகளுடனும், ஏனைய இனங்களுடன் கைகோர்த்து வாழவே விரும்புகிறது. அதனை தென்னிலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக வடக்கு முதலமைச்சர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், அவர்களின் பிரதிநிதியாகவும் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்கர்களை சந்தித்து பேசியிருந்தார். அதன்போது அவர் தமிழ் மக்களது அபிலாசைகள் குறித்தும், தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் தெரிவித்திருந்ததுடன், தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வே பொருத்தமானது என்பதையும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பௌத்த மகாநாயக்கர்கள் சமஸ்டியை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதுடன், அதனை பிரிவினை வாதமாகவும் காட்ட முயல்கின்றனர்.

இத்தகைய மதத்தலைவர்களை பின்புலமாகக் கொண்ட பெரும்பான்மை சிங்கள மக்களும், தென்னிலங்கையின் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களது கோரிக்கை தொடர்பிலோ அல்லது அவர்களது அபிலாசை தொடர்பிலோ கரிசனை கொண்டுள்ளதாக தெரியவில்லை. அவர்களது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை. இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை எட்டுவதற்கு விட்டுக்கொடுப்புடன் செல்ல தமிழ் தேசிய இனம் தயாராகவுள்ள போதும் சிங்கள தேசிய இனம் தமது பௌத்த தேசிய அடிப்படைவாத மனநிலையில் இருந்து இறங்கி வர தயார் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இந்தப் பின்னனியில் கொண்டுவரப்பட இருக்கும் புதிய அரசியலமைப்பு எவ்வகையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பநிறைவேற்றப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச ரீதியில் தற்பேதுள்ள அழுத்தத்தை இல்லாமல் செய்வதே அவர்களது நோக்கமாகவுள்ளது. அதற்கான காய் நகர்த்தல்களேயே மிகவும் சூட்சுமாக நகர்த்தி வருகின்றது. இந்த நாட்டின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லாது சர்வதேச அழுத்தத்தை தணிப்பதற்காக வருகின்ற அரசியலமைப்பானது தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகளை ஒருபோதும் பிரதிபலிக்க போவதில்லை. மறுபுறம் இரந்தம் சிந்தி போராடியதன் விளைவாக தமிழ் தேசிய இனத்தினை முன்னுறுத்தி உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் உடைய அதிகாரத்தை பறிப்பதற்கான அல்லது மாகாணசபைகளை தென்னிலங்கையின் பிரதான ஆட்சியாளர்கள் கையாளக் கூடிய வகையிலான திருத்தம் ஒன்றினை 20 ஆவது திருத்தச் சட்டம் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒருபுறம் பொறுப்புக் கூறல், நீதியான விசாரணை, மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தர தீர்வு எனக் கூறிக் கொண்டு மறுபுறம், தற்போது உள்ள அதிகாரங்களையும் பறித்து குறிபாக 13 ஆவது திருத்தச்சட்டம் மூலம் வழங்கியதை 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பறித்து தமிழர் தாயகப் பகுதிகளிலும் தென்னிலங்கையின் கரங்களை ஓங்கச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றது. இதன் ஜதார்த்த நிலைகைளை தமிழ் தேசிய இனமும், அதன் தலைமைகளும் பரிந்து கொள்ள வேண்டும்.

2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசாங்கம் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளபட்ட நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டு, முள்ளியவாய்கால் வரை தமிழ் தேசிய இனம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ் மக்களுக்கான தீர்வு எனக் கூறி தமிழ் மக்களை நட்டாற்றில் விடுவதற்கான முயற்சிகளே நல்லாட்சி என்னும் இந்த இணக்க அரசியல் ஆட்சியில் இடம்பெறுகிறது. புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தி அதில், இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு வழங்கப்பட்டு விட்டதாக சர்வதேச சமூகத்திற்கு காட்ட இந்த அரசாங்கம் எத்தனிக்கின்றது. அதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை இல்லாமல் செய்வதுடன், தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனையை தீர்த்து விட்டதாக கூறி சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்கள் சார்பாகவுள்ள ஆதரவு நிலையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகிக்றது. தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்த அரசாங்கம் தீர்வுத் திட்டம் என புதிய அரசியலமைப்பை திணிக்க முயல்வது என்பது எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களையும், இருப்பையும் கேள்விக்குட்படுத்துவதாகவே அமையும். அப்போது தமிழ் மக்களுக்காக யாரும் வர மட்டார்கள். இன்று கண்முன்னே மியன்மாரின் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இனச்சுத்திகரிப்பை பலநாடுகளும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

இந்தநிலையில் தமிழ் தேசிய இனமும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளும் அரசாங்கத்தின் காய்நகர்த்தல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இணக்க அரசியல் என்ற போர்வையில் அரசின் காய் நகர்த்தலுக்கு துணைபோவது என்பது இருக்கின்ற துணியையும் பறிகொடுத்து விட்டு, தமிழ் தேசிய இனத்தை ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடுவீதியில் நிற்கும் நிலையையே உருவாக்கும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்