இடைக்கால அறிக்கைக்கு எதிராக எவரும் பேசக்கூடாதாம்!

புதிய அரசியலமைப்பு யாப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கட்டளையிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக எவரையும் கருத்துக் கூறக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால் தற்போது இடைக்கால அறிக்கைக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கவேண்டாமென அன்புக் கட்டளையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடைக்கால அறிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்லாது வட-கிழக்கு மாகாணசபைகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் இடைக்கால அறிக்கைக்கு எதிராக கருத்துக் கூறவேண்டாம் என இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு வழக்க வேண்டும் என்றும் இந்த நல்ல சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது எனவும் சம்பந்தன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தும் முதலாவது கூட்டம் மன்னாரில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்