கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த அலுவலகத்திற்குச் சென்ற பெண் ஒருவா் தாக்கிய சம்வபமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போலி முகநூல் ஒன்றில் குறித்த பெண் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக பதிவேற்றி, அதில் இந்த பெண் இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில் நிற்கும் படத்தினை பதிவேற்றியது தொடர்பில் ஆத்திரமடைந்த பெண்ணே, குறித்த ஊழியரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் குறித்த பெண்ணை தொடர்பு கொண்டு வினவிய போது, தான் தனது காணி விடயம் தொடர்பில் இராணுவ சிவில் முகாமுக்கு காணி ஆவணத்தை வழங்கச் செல்ல, உதவிக்கு குறித்த ஊழியரை தன்னுடன் வருமாறு அழைத்த போது அவா் தான் இராணுவ முகாமுக்கு வரவில்லை என்றும் சற்று தொலைவில் நிற்பதாகவும் என்னை சென்று ஆவணத்தை வழங்குமாறு கூறினாா்.
இதன் போது நான் இராணுவ முகாம் வாயிலில் நின்று காணி ஆவணத்தை வழங்கிய போது அவா் பின் பக்கமாக நின்று என்னை புகைப்படம் எடுத்துள்ளாா். இது நடந்தது இரண்டு மாத்திற்கு முன்னார், ஆனால் முகநூல் ஒன்றில் குறித்த படத்தை பதிவேற்றி என்னைப் பற்றி தவறான கருத்துக்களும் பதிவேற்றப்பட்டிருந்தது.
இது தொடர்பில் குறித்த அலுவலக அதிகாரியிடம் முறையிடச்சென்ற போது அந்த ஊழியருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது நான் என்னை பாதுகாக்க தாக்கினேன் என்றார்.
இது தொடர்பில் குறித்த ஊழியர், கடமை நேரத்தில் தன்னை அலுவலகத்தில் நுழைந்து தாக்கியது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.