2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர்களின் போராட்டம் ஓரு குமிழி வடிவமாகவே உள்ளது – குருபரன்!

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மக்களினுடைய போராட்டமானது வெறும் குமிழி வடிவமாகவே உள்ளது எனவும் இனிவரும் காலங்களில் எமது போராட்ட வடிவங்களை மாற்றவேண்டுமெனவும் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு குளப்பிட்டிச் சந்தியில் சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சுலக்சன், கஜன் ஆகியோரின் ஓராண்டு நினைவுநிகழ்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

2016ஆம் ஆண்டு சுலக்சன், கஜன் ஆகியோரைச் சுட்டுவிட்டு அதனை முதலில் விபத்து எனச் சித்தரித்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து, மரணவிசாரணை நடத்திய வைத்திய அதிகாரி, எமது சட்டத்தரணி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் காரணமாகவே அது கொலையெனப் பதிவு செய்யப்பட்டு விசாரணை இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் அவரிடத்தில் சில சான்றுப் பொருட்களை நாம் கையளித்துள்ளோம் அது தொடர்பான மேலதிக அறிக்கைக்காகக் காத்திருக்கின்றோம் என கடந்த ஒரு வருடமாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் கூறி வருகின்றனர்.

இந்த வழக்கிலே முன்னிலையாகவேண்டி ஏற்பட்ட ஒரு சந்தர்ப்பத்திலே நீதவானின் ஆளுகைக்குட்பட்டு அவ்வளவுதான் செய்யமுடியும் என்ற நிலையிலே பல்கலைக்கழக சமூகம் என்ன செய்யமுடியும் என்ற சுயதேடல் அவசியமாகின்றது.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது போராட்டம் ஒரு குமிழி வடிவத்திலேயே நடைபெறுகின்றது. அதாவது சம்பவங்கள் அல்லது அனியாயங்கள் நடைபெறுகின்றபோது உடனே வெடித்துக் கிளம்பும் போராட்டம் அப்படியே நீர்த்துப் போகின்றது.

அதேபோல்தான் சுலக்சன், கஜனின் போராட்டமும் உள்ளது. எனவே சுலக்சன், கஜனின் அடுத்த வழக்குத் தவணையிலாவது பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து வழக்கு நடைபெறும்போது நாம் இந்த வழக்கினை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் என்பதை அரசாங்கத்துக்கு காட்டுவதோடல்லாமல், இவ்வழக்கு இழுத்தடிக்கப்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்றவற்றில் முறைப்பாடு செய்வதுடன், ஐநாவில் நீதிக்குப் புறம்பாக நடைபெறும்கொலைகள் தொடர்பாகவும் முறைப்பாடு செய்யமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் அவர் தனது தேர்தலுக்காகவோ, சர்வதேசத்துக்கோ, தான் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கின்றேன் என்பதைக் காட்டவே இவ்வாறு நாடகமாடுகின்றார் எனவும் அவரிடம் சென்று முறையிடுவதால் உங்களுக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்