பண கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஐந்து பேர்கொண்ட குடும்பம் தற்கொலை செய்து கொண்டது. இந்த விவகாரம் யாழ் குடாநாட்டை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட பெருந்தொகை பணம், ஏமாற்றப்பட்டமையினால் இந்த விபரீதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பணத்தினை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய கொள்ளைக் கும்பல் தொடர்பான தகவல்களை யாழ். ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
பணத்தினை பெற்றுக்கொண்ட பிரதான சூத்திரதாரி சிவசங்கர் என்பவர் முன்கூட்டியே சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.
சுவிஸ் தப்பியோடிய சிவசங்கரின் அண்ணன் சிறி என்பவரும், சிவசங்கரின் மனைவியான சுகன்யா என்பவர்களே பெற்ற பணத்தை திருப்ப தர முடியாதென தெரிவித்துள்ளனர். பணம் கொடுத்தமைக்கான ஆதாரத்தை காட்டுமாறு சுகன்யா கோரியுள்ளார்.
ஒரு கோடி 17 இலட்சம் ரூபா பணத்தை நம்பிக்கையின் அடிப்படையில் சிறி மற்றும் சிவசங்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சிறி என்பவரினால் வெறும் பத்து இலட்சம் ரூபா மீள கொடுக்கப்பட்ட நிலையில் மீதிப் பணம் ஏமாற்றப்பட்டுள்ளது.
இதனால் மனவிரக்தி அடைந்த கிருசாந்த் கடந்த மாதம் தற்கொலை செய்துள்ளார். இவர் சொந்தமாக நகை செய்யும் பட்டறை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
குறித்த கொள்ளை கும்பலினால் மீதி பணத்தை தர மறுத்தமையால் கிருசாந்தின் மனைவி சுனேந்திரா மற்றும் அவரது மூன்று பிள்ளைகளும் நேற்று விஷமருந்து தற்கொலை செய்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் – அரியாலையில் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன.
கிருசாந்தின் மனைவி சுனேந்திரா தற்கொலை செய்து கொள்ள முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் எனது தற்கொலைக்கு காரணம் சிவசங்கரின் மனைவி சுகன்யா மற்றும் சிறி ஆகியோரே காரணம் என எழுதியிருந்தார்.
இந்தக் கடிதம் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு எழுதப்பட்டிருந்தது.
இதேவேளை தற்கொலை காரணமாக சுகன்யா மற்றும் சிறி ஆகியோரும் சுவிஸிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.