புலிகளின் போர் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல : சி.வி.விக்னேஸ்வரன்

விடுதலைப்புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல. ஆகவே கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவந்ததும் ராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிடவேண்டும். என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வரின் வாரத்திற்கு ஒருகேள்வி என்றதொனியில் இந்த வாரத்திற்கான கேள்விக்குப் பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”தாயகம், தன்னாட்சி, தமிழர் தரையிணைப்பு என்பவற்றிற்கு உகந்த தீர்வு சமஸ்டியே என்று அன்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2009 ஆம்ஆண்டின் பின்னர்’போரில் நாங்கள் தோற்றுவிட்டோம் நாம் கோருவது கிடைக்காது. யதார்த்த அடிப்படையில் ஏதோ சில சலுகைகளையே நாம் பெற்றுக்கொள்ளமுடியும்’ என்ற மனோபாவம் எம் தலைவர்கள் சிலரிடையே புகுந்துள்ளது.

இந்த வகையில்தான் இராணுவத்தினரதும் சில சிங்களத்தலைவர்களினதும் எண்ணங்களும் இருந்து வருவதை நாம் காணலாம். ‘போரில் நாம் தமிழர்களை வென்றுவிட்டோம். ஆகவே அவர்களிடம் நாம் பறித்த காணிகள் யாவும் எமக்குச் சொந்தம். இனித்தமிழர்கள் கோரும் எந்தக் கோரிக்கைகளுக்கும் நாம் செவிசாய்க்கத் தேவையில்லை.

நாமாக மனமுவந்து தருவதையே அவர்கள் ஏற்கவேண்டும்’ என்று நினைக்கின்றனர். ஓரிருவிடயங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆயுதமேந்தியோர் மத்திய அரசைப்பிடிக்க எத்தனிக்கவில்லை. தாம் வாழ்ந்த இடங்களில் அரசை நிறுவவே முயன்றனர்.

போர் என்று கூறியது இரு இனங்களுக்கிடையேயான போர் அல்ல. அது அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் நடைபெற்ற ஒன்று. முன்னர் ஜே.வீ.பி.காலத்திலும் அப்படித்தான். அரசாங்கத்திற்கும் ஜே.வி.பிக்கும் இடையிலேயே போர் நடைபெற்றது.

எனவே விடுதலைப்புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல” என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்