காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், தொடர் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே! அனந்தி சசிதரன்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியாகவே இன்றைய நல்லாட்சி அரசு முன்னெடுத்து வருகின்றது. அதனை உறுதிசெய்வதாகவே காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சிலருடனான நேற்றைய ஜனாதிபதியின் சந்திப்பும் அமைந்துள்ளது.

காணாமல் போனோரின் உறவினர்களிடம் இருந்து முறைப்பாடுகளை பெற புதிய விண்ணப்பப்படிவம் ஒன்றை மாவட்ட செயலகங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் இந்த விண்ணப்பப்படிவம் ஊடாக அனைத்து தகவல்களையும் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட செயலர்களுக்கு சுற்றுநிரூபம் ஒன்றை அனுப்புவதற்கும் ஜனாதிபதியால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலரை அழைத்து ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொண்ட சந்திப்பின் போதே இவ் அறிவுறுத்தல்களை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

இவ்விடயத்தில் எனது கேள்வி என்னவென்றால்… காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் எங்கே போனது? போரின் இறுதி காலகட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என அத்தனை விபரங்களும் அவரவர் உறவினர்களால் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு இருக்கையில் புதிதாக விண்ணப்பப்படிவம் அனுப்பி அவசரகதியில் விபரங்களை திரட்டுவதன் நோக்கம்தான் என்ன? ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவினர் முன்னிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் வழங்கிய சாட்சியங்களின் மீது எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத நல்லாட்சி அரசாங்கம் இவ்விடயத்தில் நாடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச நாடுகளுக்கு காட்டிக்கொள்வதற்காகவே மீண்டும் மீண்டும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றது.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதற்கென்று 1400 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ள இந்த அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவதாக உலகிற்கு போக்கு காட்டும் நோக்கிலேயே புதிய விண்ணப்பப்படிவங்கள் மூலம் விபரங்கள் திரட்டும் நடவடிக்கை அமைந்துள்ளது.

இது அப்பட்டமான ஏமாற்று நாடாகம். கண்முன்னே உறவுகளை கையளித்துவிட்டு சொல்லொனாத் துயரத்தை அனுபவித்து வரும் எம்மை ஒரு கருவியாக்கி தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக்கொள்ள முற்படும் செயலானது மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.

எங்கள் உணர்வோடு விளையாடும் ஈவுஇரக்கமற்ற இச்செயற்பாட்டிற்கு துணைபோவது எம்மை நாமே விலைபேசுவதாகவே அமையும் என்பதால் எமது உறவுகள் இச்செயற்பாட்டை முழுவதுமாக புறக்கணிக்குமாறு உங்களில் ஒருத்தியாக நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாவிடிலும் எங்கோ ஓர் இடத்டதில் உயிரோடு இருக்கிறார்கள் என்ற ஆறுதலோடு இருந்த எமக்கு இன்று எம்மவர்கள் இருக்கிறார்களோ, இல்லையோ என்பதே கேள்விக்குரியதாக்கியது தமிழர்களின் வாக்குப்பலத்துடன் ஆட்சியமைத்துள்ள இன்றைய நல்லாட்சி அரசாகும்.

இலங்கையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதையும் அதில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேச மனித உரிமை பிரதிநிதிகள் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். இதனை முன்னால் ஜனாதிபதியும் இச்சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்கிய மகிந்த ராஜபக்சே ஏற்றுக்கொண்டிருந்தார்.

அவ்வாறு இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்த பட்டியலை வெளியிடுவதாகவும் மகிந்த ராஜபக்சே சர்வதேச மன்றத்தில் வாக்குறுதியளித்திருந்தார். 2015 ஜனவரி 08 இற்கு முன்னர் இருந்த இரகசிய சித்திரவதை முகாம்கள் வேண்டுமானால் இன்று இல்லாது போயிருக்கலாம். ஆனால் அவற்றில் சட்விரோதமாக தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்கள் எவ்வாறு இல்லாமல் போனார்கள்? இதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

குறித்த சட்டவிரோத தடுப்பு முகாம்கள் குறித்து ஜனாதிபதியைச் சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோராது உறவினர்கள் கேள்வியெழுப்பிய போது, அவ்வாறு இரகசிய முகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இல்லையெனவும், அவ்வாறு எவரும் இரகசியமாக தடுத்து வைக்கப்படவில்லை எனவும் பதிலளித்துள்ளார்.

அவ்வாறு இரகசிய முகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இல்லையெனக் குறிப்பிட்டதன் மூலம் கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் இருந்ததையும் அதில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும் ஏற்றுக்கொண்டுள்ளார் மைத்திரிபால சிறிசேன.

ஆகவே உங்களது ஆட்சிக்காலத்திற்கு முன்னர் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் எங்கே? அவ்வாறு எவரும் இன்று இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? அதற்கு காரணமானவர்கள் யார்? இவற்றிற்கு பதில் கூறுவதுடன் இதனுடன் தொடர்புடையவர்கள் எவராயிருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதற்கு உரிய நடவடிக்களை எடுக்க வேண்டியதும் இன்றை நல்லாட்சி அரசின் பொறுப்பாகும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடயத்தில் செய்ய வேண்டியதை செய்யாது எம்மையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நோக்கில் கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இன்றைய நல்லாட்சி அரசும் கவனம்செலுத்தி வருவதையே மேற்படி விடயங்கள் தெட்டத்தெளிவாக உனர்த்தி நிற்கின்றன.

அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு பின்புலமாக இருந்து ஆதரவளித்த இணைத்தலைமை நாடுகளும், இனவழிப்பு போரை முன்னெடுத்த இலங்கை அரசிற்கு சகலவழிகளிலும் ஆதரவாகச் செயற்பட்ட இந்தியா, அமெ-ரிக்கா, சீனா, ரைசியா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் மனித உரிமை பற்றியும் மனிதாபிமானம் குறித்தும் பேசிவரும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக மன்றங்களும் இவ்விடயத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்பதை இவ்விடத்தில் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உட்பட தமிழர்கள் எதிர்நோக்கியிருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சந்திப்புகளும், பேச்சுக்களும் பயனற்றவையாகும். அத்துடன் எமது போராட்டத்தை வலுவிழக்கச் செய்வதாகவும் அவை அமையும் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொண்டு நாங்கள் எமது கோரிக்கையில் உறுதியாக நின்று அதற்கான தீர்வு கிடைக்கும்வரை அறவழியில் தொடர்ந்து போராடுவது ஒன்றுதான் தமிழர்களாகிய எம்முன் உள்ள ஒரே தெரிவாகும்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்