தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில் மாணவர்கள், இளையோர் அமைப்பு உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலர் சிறப்புரையாற்றினார்கள்.
முதலில் தமிழீழ தேசியக்கொடியேற்றல், அகவணக்கம் பின்பு ஈகைச்சுடர் ஏற்றல் மற்றும் துயிலுமில்ல பாடலுடன் மாவீரர் வார தொடக்க நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
புலம்பெயர் தேசத்தில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும், தமிழ் மொழி சார்ந்த விடயங்களை மாணவர்கள் எல்லோரிடமும் கொண்டுசேர்க்கவேண்டுமென்றும் மாணவன் செல்வன் விதுஷன் உரையாற்றினார். பல்கலைக்கழக தமிழ் மன்றங்கள் பலது இருந்தும் அவற்றில் சிலரே தமிழ் சார்ந்த விடயங்களை முன்னெடுத்து செல்கின்றார்கள் மற்றவர்களும் இனி வரும் காலங்களில் தாயகம், தேசியம், மொழி போன்ற விடயங்களை தங்களது மன்றங்களூடாக செய்யவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
பின்பு சர்வதேச அரசியல் மற்றும் தமிழீழ புவிசார் அரசியல் நிலைமை, தாயகத்தில் தமிழர் தரப்படுத்தல் சார்ந்த விளக்கங்களை இளையோர் அமைப்பு உறுப்பினர் செல்வன் கிரிஷ் எடுத்துரைத்தார். அதுமட்டுமல்லாமல் பிரித்தானிய அரசின் பொய்முகம் மற்றும் சர்வதேச சக்திகள் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்று கொண்டிருக்கும் திட்டமிட்ட இனப்படுகொலையை பார்த்தும் பார்க்காதது போல இருப்பதின் உண்மை நிலையை பல்கலைக்கழக விரிவுரையாளர் Andy Higginbottom எடுத்துரைத்தார்.
மலர்வணக்கம், உரைகள் எல்லாம் முடிந்த பின்பு தேசியக்கொடி ஏந்தலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.