2018 ஆம் ஆண்டில் மனிதாபிமான உதவிகளுக்கு 22.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
உலகில் மிகவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள 91 மில்லியன் மக்களுக்கு உதவ இந்த நிதி அவசியமாகும்.
குறித்த நிதியானது கடந்த ஆண்டு கோரப்பட்ட நிதியை விட ஒரு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
சிரியா மற்றும் யேமன் முதலான நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவைச் சேர்ந்த 5.4 மில்லியன் ஏதிலிகள், அயல் நாடுகளில் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க, 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியமாகும்.
அத்துடன், சிரியாவில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சரிசெய்ய 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆபிரிக்காவின் நாடுகளுக்கும் உதவிகளின் அவசியம் அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.