அமைச்சரவைக்குள் கூட்டமைப்பை உள்ளீர்க்க பகீரத பிரயத்தனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்தை அமைத்து அமைச்சரவைக்குள் உள்ளீர்க்கும் வகையிலான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளதால், ஐக்கிய தேசிய கட்சி தனியாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் புதிய அரசாங்கத்தில் கூட்டமைப்பையும் உள்ளீர்க்கும் முயற்சிகளில் தற்போதைய சிறுபான்மை அமைச்சர்கள் சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அதனை, இலங்கைத் தமிழர் விடயத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற அயல் நாடொன்று விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கூட்டமைப்பு தலைமை சாதகமான முடிவெடுக்கும் பட்சத்தில் நான்கு அமைச்சு பொறுப்புக்கள் வழங்குவதற்கு ஐ.தே.க. தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இவ்விடயத்தில் கூட்டமைப்பு தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், உடனடியாக தீர்மானிக்க முடியாது என சம்பந்தப்பட்டவர்களிடம் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொது எதிரணியுடன் இணைந்துக் கொள்வது தொடர்பில் தீவிரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவ்வாறான நிலை ஏற்படுமானால் நல்லாட்சியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியே வரவேண்டிய அரசியல் புயலொன்று தலைநகரில் மையம் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், அண்மையில்  கருத்து தெரிவித்திருந்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இவ்வாறான சூழல் ஏற்படுமாக இருந்தால் ஐ.தே.கட்சிக்கு தேவையான சந்தர்ப்பத்தில் ஆதரவளிக்க கூட்டமைப்பு தயாராகவிருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்