குடுமிப்பிடி சண்டைகள் உச்சம்:செயலிழந்த சம்பந்தன்,சுமந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு சர்ச்சை இன்னும் முழுமையாக தீராது இழுபறிப்பட்டு செல்லும் நிலையில் யாழ்.மாநகரசபை முதல்வர் வேட்பாளர் உச்சமடைந்துள்ளது.மாநகர முதல்வர் கதிரைக்கு சொலமன் சிறில் மற்றும் ஜெயசேகரத்திடையே போட்டி உச்சம் பெற்றுள்ளது.தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் தமிழரசுக்கட்சிக்கு எதிராக வேலை செய்யப்போவதாக இருவரும் கட்சித்தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிந்திய தகவல்களின் படி ஊடகவியலாளர் வித்தியாதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட் உள்ளிட்ட இருவரும் போட்டியாளர் பட்டியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர்.இந்நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதி மொழிகளை முன்வைத்து மாவை சேனாதிராசாவை இறுக்கிபிடித்துவருகின்றனர்.
இதனிடையே பங்காளிக்கட்சிகளிற்கு தமது நலன்களிற்காக அள்ளிவீசிவிட்டு தன்னை நட்டாற்றில் சம்பந்தன்,சுமந்திரன் கைவிட்டுள்ளதாக மாவை திட்டிதீர்த்துவருகின்றார்.
இதனிடையே சங்கானை பிரதேசசபையிலும் சர்ச்சை தோன்றியது. சங்கானை பிரதேசசபையின் முதல் இரண்டு வருடமும் புளொட்டும், அடுத்த இரண்டு வருடமும் தமிழரசுக்கட்சியும் என முடிவானது. இந்த தீர்மானத்தை தமிழரசுக்கட்சி எம்.பி சரவணபவன் எதிர்த்தார். அவரது வட்டுக்கோட்டை தொகுதிக்குள் சங்கானை பகுதி வருவதால், புளொட் அங்கு நிர்வாகம் செய்வதை அவர் விரும்பவில்லை. அது தனது எதிர்கால தேர்தல் வெற்றிக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென நினைக்கிறார்.

இந்நிலையில் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு, ‘சங்கானையை தமிழரசுக்கட்சிக்கு முழுமையாக ஒதுக்காவிட்டால், எனது பேப்பர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படும்’ என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் சித்தார்த்தனிடம் பேச்சு நடத்தினர். எனினும், சித்தார்த்தன் அதற்கு சம்மதிக்கவில்லை.வடக்கு கிழக்கில் ஒரேயொரு சபைதான் தமக்கு வழங்கப்பட்டுள்ளது, கூட்டமைப்பைவிட்டு வெளியேறுகிறோம் என மிரட்டல் விடுத்தால்தான், அதிக சபை தருவீர்களா? ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி சரவணபவன் மிரட்டுகிறார் என்பதற்காக எம்மிடமுள்ள ஒருசபையையும் எப்படி தர முடியுமென சித்தார்த்தன் தெரிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சரவணபவனையும் அவரது பத்திரிகையான உதயனையும் நம்பியிருக்கும் தமிழரசு தலைமை தன்னிச்சையாக சித்தார்த்தனை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு தமது வேட்பாளர்களை முழு அளவில் களமிறக்க முடிவு செய்திருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை,மன்னார் நகரசபைகளும் வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் கூட்டமைப்பினுள் உச்ச முரண்பாடுகளை எதிர்கொண்டுள்ளன.

About சாதுரியன்

மறுமொழி இடவும்