தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்த சதி: திருமாவளவன்

தி.மு.க. மிக எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால் ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்ய சிலர் சதி செய்கின்றனர் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கோவில்கள் தொடர்பாக நான் பேசியது குறித்து விளக்கம் அளித்த பின்னரும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால், எச்.ராஜா போன்றவர்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தரப்பினர் விதிகளை மீறுகின்றனர். அங்கு காவல்துறையினரும், தேர்தல்ஆணையமும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி, பணப்பட்டுவாடா புகார் வந்தால் தேர்தலை நிறுத்துவார் என தகவல் வரும் நிலை உள்ளது. அங்கு தி.மு.க. மிக எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய சிலர் சதி செய்கின்றனர்.

பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமே தவிர தேர்தலை நிறுத்தக் கூடாது.

கெயில் எரிவாயு குழாய் விவகாரத்தில், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கெயில் திட்டத்தை எதிர்க்கவில்லை விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதையே எதிர்க்கின்றனர்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது? இந்த விசயத்தில் மாநிலஅரசு உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு தர வேண்டும். குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்க வேண்டும்.

புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரு.50 லட்சம் இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்திக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்பட வேண்டிய பொறுப்பு ராகுல்காந்திக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்