2ஜி அலைக்கற்றை வழக்கில் அதிரடி தீர்ப்பு – தப்பியது திமுக

2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் முழக்கமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பை வழங்கினார்.

அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் உற்று நோக்கி வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆ ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, கனிமொழி மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் ஆகியோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். கனிமொழியுடன் அவரது சகோதரரான அழகிரியும் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

டிஆர் பாலு, திருச்சி சிவா, துரைமுருகன் உள்ளிட்டோரும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

2ஜி வழக்கில் முக்கிய தீர்ப்பை முன்னிட்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி நீதிபதி சைனி குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ஆ ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி சிபிஐ நிரூபிக்க தவறிவிட்டதாகவும் நீதிபதி சைனி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்