வடக்கு முதல்வர் – மலேசியர் பிரதமர் சந்திப்பை தடுக்க முற்பட்ட கொழும்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் சந்திப்பதைத் தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டமை தொடர்பிலான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பிலான பின்னணியை கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மலேசியப் பிரதமர் ரசாக், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

தமது தலைவர்கள் யாரையும் சந்திப்பதற்கு மலேசியப் பிரதமர் தெரிவு செய்யாதமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோபமடைந்தது. இந்த விவகாரம் குறித்து கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியிருந்தார்.

இதுகுறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் பிரதமர் பணியகம் அதிருப்தியை வெளியிட்டது. அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் சந்திப்புக்கு அனுமதி அளிக்கவில்லை என்ற அடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சருடனான மலேசியப் பிரதமரின் சந்திப்பை ரத்துச் செய்யும் முயற்சிகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஈடுபட்டனர். எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

மலேசியப் பிரதமருடன் வந்திருந்த உயரதிகாரிகள், தமது தலைவரின் சந்திப்பு ரத்துச் செய்ய முடியாது என்று வலியுறுத்தினர். தமது பிரதமர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்வதற்கும் முதலில் திட்டமிட்டிருந்தார் என்று மற்றொரு அதிகாரி வலியுறுத்திக் கூறியிருந்தார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான பிரதமரின் சந்திப்பு மிகவும் வெற்றிகரமானதாக இருந்தது, மலேசியப் பிரதமரை அவர் ஈர்த்து விட்டார்” என்று குறிப்பிட்ட மலேசிய அதிகாரி ஒருவர், விக்னேஸ்வரனை உள்ளூர் நண்பர் என்றும் குறிப்பிட்டார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்