வட்டுக்கோட்டை – அராலி வீதியில் கோட்டைக்காட்டில் இன்று மதியம் கோர விபத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தீயில் கருகிப் பலியானார்.
அவரோடு மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றொரு நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் அராலி மத்தி ஊரத்தியைச் சேர்ந்த எஸ்.றஜீவன் (வயது-26) என்பவரே பலியானார்.
ஒரு குழந்தையின் தந்தையான இவரது மனைவி மற்றொரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான திகதி குறிக்கப்பட்டு தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவர் இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று, பின்னர் படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவராவார்.
உயிரிழந்தவரின் உறவினர் ஒருவரது மரணக் கிரியை இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டுவிட்டு பிரதான வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் காயமடைந்து மோட்டார் சைக்கிளிலேயே கிடந்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கி வெடித்துத் தீப்பற்றி மோட்டார் சைக்கிள் எரிந்தது. இதனை அவதானித்தவர்கள் ஒருவரை படுகாயங்களுடன் இழுத்து வெளியே எடுத்த போதிலும் மற்றவரை மீட்க முடியவில்லை. அவர் தீயில் எரிந்து பலியானார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.