ஊர்காவற்துறையில் 9 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு 10 வருட சிறை!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் 9 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளியான அதிபருக்கு 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு 10 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் குற்றவாளியான அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நட்ட ஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு நவம்பர் மாத நடுப்பகுதியில் காலை 7.30 மணியளவில் பாடசாலையிலுள்ள அதிபரின் அலுவலகத்திற்குள் வைத்து, 9 வயது மாணவியை குறித்த அதிபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாணவியால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் உண்மையானது, நம்பகத்தன்மையானது என தெரிவித்த நீதிபதி, அதிபரான எதிரியை குற்றவாளி என தீர்ப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு சில அதிபர்களின் செயற்பாட்டால் பாடசாலைகள் நம்பிக்கைத்தன்மையற்ற காமக்களியாட்ட இடமாக மாறிவிடும் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்