டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எம்.எல்.ஏ பிரபு நேரில் சந்தித்தார். காலை 9 மணிக்கு தினகரன் இல்லத்திற்கு சென்ற பிரபு, ஒரு மணி நேரம் அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது தொகுதி பிரச்சனைகளை தீர்ப்பதில் அமைச்சர்கள் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம்சாட்டினார். தொகுதி மக்களுக்கு சேவை செய்ய சிலர் தடையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
முட்டுக்கட்டையாக யார் உள்ளார்கள் என்பது முதல்வர் உட்பட அனைவருக்கும் தெரியும் என்று கூறிய பிரபு, தன்போல் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாமல் அல்லாடும் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் உள்ளதாகவும் அவர்கள் விரைவில் டிடிவி தினகரன் அணிக்கு வருவார்கள் என்றும் பிரபு கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தவிர்த்து விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ இரத்தினசபாபதி ஆகிய இருவரும் தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபுவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரை தவிர்த்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
எம்.எல்.ஏக்கள் அணி தாவும் படலம் சற்று ஓய்ந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் எம்.எல்ஏ-க்கள் அணி தாவ தொடங்கியிருப்பது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நோக்கர்கள் இந்த நிகழ்வை உற்று நோக்கி வருகின்றனர்.