கூட்டமைப்பு பழிவாங்கக் கூடாது! – மணிவண்ணன்

உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது என்றால், நாம் பகிரங்க வாக்கெடுப்புக்குத தயாராகவே இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் தெரிவின்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படக் கோருவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது. எந்தவொரு சபைகளிலும் இரகசிய வாக்கெடுப்புக் கோரப்பட்டாலும், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும் என்றும், பகிரங்கமாகவே எதுவும் சபைகளில் இடம்பெறவேண்டும் என்றும் அந்தக் கட்சி தெரிவித்திருந்தது. யார் யாரோடு கூட்டுச் சேர்கின்றார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்ததாவது-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கோரிய விடயத்துக்கு சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். உள்ளூராட்சி சபைகளில் தலைவர்களுக்கான வாக்கெடுப்பு நடக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை சபையில் சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும்.

அவர்கள் வாக்களித்த பின்னர் அந்த உறுப்பினர்கள் பழிவாங்கப்படக் கூடாது. அவர்கள் எமக்கு ஆதரவு வழங்கினார்கள் அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று அந்த உறுப்பினர்கள் மீது கூட்டமைப்புத் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்காது என்று உறுதிப்பாடுகளை வழங்கினால், நாம் பகிரங்க வாக்கெடுப்புக்குத் தயார்” என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்