சமூக ஊடகங்கள் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில்,
‘சமூக ஊடகப் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். இதன் பின்னர் சமூக ஊடகங்கள் மீதான தடையினை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு ஊடகத்துறையினது அபிவிருத்தி தொடர்பான கொள்கையொன்றை வலுப்படுத்துவதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படும்.
எவ்வாறாயினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்படும். நாட்டினது தேசிய பாதுகாப்பையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்’ என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.