லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞனின் தாயாருக்கு முல்லைத்தீவில் அச்சுறுத்தல்!

லண்டன் வாழ் இலங்கை இளைஞர் ஒருவரின் குடும்பத்தாருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளியவளை – மாமூலையினை சேர்ந்த ஜெ.இளவரசன் என்பவர் லண்டனில் வசித்து வருகின்றார். எனினும் இவரது குடும்பத்தார் முல்லைத்தீவில் வசித்து வருகின்றார்கள்.

அவர்களுக்கு மர்மநபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்களில் குறித்த இளைஞன் முன்னிலையில் நின்று செயற்பட்டவர்” என்று தெரிவித்த மர்ம நபர்கள் குறித்த இளைஞனின் தாயாரை நேற்று இரவு அச்சுறுத்தியுள்ளார்கள்.

இது தொடர்பில் அவரது உறவினர்கள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டபோதும் அவர்களின் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், முல்லைத்தீவு பகுதியில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் ஊடாக வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

“இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய முள்ளியவளை, மாமூலையினை சேர்ந்த ஜெ.இளவரசன் என்பவரின் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக” வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்