காடுவெட்டி குரு மறைவு – சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி

எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான வன்னியர் சங்க தலைவர் அண்ணன் காடுவெட்டி குரு அவர்கள் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.

அண்ணன் குரு அவர்கள் என் மீது தனிப்பட்ட அன்பும், அக்கறையும் கொண்டவர். தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்தப்பட்ட காலங்களில் அவருடன் நெருங்கி பழகி இருக்கிறேன். பழகுவதற்கு இனியவர். காட்சிக்கு எளியவர். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்கு வேராக நின்று உழைத்தவர். பெருமதிப்பிற்குரிய அய்யா மருத்துவர் இராமதாசு அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஆற்றல் மிக்க செயல் வீரராக அவர் திகழ்ந்தார். கடும் உழைப்பாளி. தாய் மண்ணின் மீதும் தமிழ் மொழியின் மீதும் மாறா அக்கறை கொண்டவர். அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் என்னை வெகுவாக பாதித்திருக்கிறது. உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அவர் இருந்தபோது சென்று நான் பார்த்தேன் அண்ணன் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையோடு நான் இருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கை இன்று பொய்யாகி விட்டது.

பெருமதிப்பிற்குரிய அண்ணன் காடுவெட்டி குரு அவர்களை இழந்து வாடுகின்ற பல லட்சக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் உறவுகளின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் நான் உரித்தாக்கிக் கொள்கிறேன். என் அன்பிற்குரிய அண்ணன் காடுவெட்டி குரு அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தை நாம் தமிழர் கட்சியின் சார்பாக செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்