இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம், -International Day of The Disappeard- வருடந்தோறும் ஆகஸ்டு 30ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவ தலைமை அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச்சென்று விட்டாலோ அல்லது கைது செய்து காணாமல் போகசெய்வதாலோ அதன் பின்னர் அவருடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் போய்விடும். இதையே காணமல் போதல் என்கிற சொல் பதத்தில் அழைக்கிறார்கள்.

சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ, காணாமல் போதலை ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும் கட்டாயமாக காணாமல் செய்யப்படுதல் என்பது தடை செய்யபப்ட வேண்டும் என்றே ஐ.நா கூறுகிறது.

அதாவது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐ.நா கூறுகிறது. எனினும் அப்படி காணாமல் செய்வோரை இரகசிய சிறைகூடங்களில் அடைத்தோ அல்லது இரகசியமாக படுகொலை செய்தோ விடும் நிலை இன்னமும் தொடர்கிறது. உலகெங்கும் பல இலட்சம் பேர் காணாமல் போயுள்ளார்கள். எத்தனை பேர் என குறிப்பிட்டு நிச்சயமாக சொல்ல எந்த அமைப்பும் முயற்சி எடுக்கவில்லை.

கைதாகி காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (FEDEDAM) எனும் அரச சார்பற்ற அமைப்பு, 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது லத்தீன் அமெரிக்காவில், சந்தேக நபர்கள் ரகசியமாக கைது செய்யப்படும் முறைமையை எதிர்த்து முதன்முதலாக கோரிக்கை வைத்தது. கொஸ்டாரிக்காவில் இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் சர்வதேச மன்னிப்பு சபை, ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பனவும், காணாமல் செய்யப்படுவோருக்கு எதிராக போராட தொடங்கின. இதையடுத்து காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் மக்களிடையேயும் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டது.

உலக மகா யுத்தங்களின் போதே அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக இரண்டாம் உலக போரின் போது ஹிட்லரின் கொடூர நடவடிக்கையால் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட யூதர்கள் காணாமல் போயுள்ளனர்.

ரவுல் வாலன்பெர்க் (Raoul Wallenberg) : இரண்டாம் உலக போர் காலத்தில், காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்காக தன் வாழ்நாளை அர்பணித்த ஒரு ஹீரோ என்றே இவரை சொல்லலாம். 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதாபிமானி என இன்றளவும் பாராட்டப்படுகிறார். காரணம் இவர் மட்டுமே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட காணாமல் போனவர்களை அவர்களது குடும்பத்தினருக்கு மீட்டுக்கொடுத்துள்ளாராம். ஆனால் இவரின் முடிவு பரிதாபகரமானது. 1945ம் ஆண்டு ஜனவரி 17ம் ட்யிகதி ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்.

காணாமல் போனவர்கள் பலர் தமது சொந்த முயற்சியினால் குடும்பங்களுடன் ஒன்றிணைவதும் நடந்து வருகிறது. ஒரு சிலர் பத்து, இருபது வருடங்களுக்கு பிறகு தற்செயலாக தமது நெருங்கிய உறவுகளுடன் ஒன்று சேரும் நெகிழ்ச்சி தருணங்களை உருவாக்கி கொள்கிறார்கள்.ஆனால் ஆயுத முனையில் காணமல் போவோரில் பலர், காணாமல் போன குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டு விடுகிறார்கள் என்பது பலரும் ஏற்றுக்கொள்ள விரும்பாத உண்மையாக உள்ளது.dcp6979876464

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு முடிவுற்ற சிவில் யுத்தத்தின் பின்னரும், அதற்கு முன்னரும் வி.புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்