திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து மூன்று விடயங்கள் முன்மொழிவு

வடக்கில் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 விடயங்கள் வடக்கு மாகாணசபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டுவரப்பட்டது.

வட. மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது மாகாணசபை உறுப்பினர் உரையாற்றுகையில், “தமிழர் நிலங்களில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள மயமாக்கல் முன்னெடுப்புகளையும் தற்போது முல்லைத்தீவு உட்பட ஏனைய நான்கு மாவட்டங்களிலும் நிகழ்த்தப்படும் சிங்களமயமாக்கல் முன்னெடுப்புகளையும் தகுந்த வல்லுநர் குழாம் ஒன்றை நிறுவி அவர்களின் ஊடாக ஆவணப்படுத்தல். இவ்வாவணப்படுத்தல் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சிங்களமயமாக்கல் தொடர்பான வட. மாகாணசபையின் உத்தியோகபூர்வ ஆவணமாக இருத்தல் வேண்டும்.

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் இக்குடியேற்றங்களை உடன்நிறுத்தவேண்டும் என்ற எமது அழுத்தமான கருத்தினை அரசாங்கத்துக்கு உரிய வகையில் தெரியப்படுத்துதல்.

தற்போது முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சட்டத்திற்கு புறம்பான மாயபுர குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும்முகமாக வடக்கு மாகாணசபையை சார்பாக்கும் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் குறித்த இடத்திற்கு வருகைதந்து தொடரும் சிங்களமயமாக்கலை எதிர்த்து வலிமையான கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் ஒருநாள் கவனயீர்ப்பை மேற்கொள்ளவேண்டும்” ஆகிய மூன்று விடயங்களை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற மாவை சேனாதிராஜா ஆகியோர் தொடர்ச்சியாக அரசுடன் பேசி வருகிறார்கள். ஆகவே ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்கும் என கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்