தாயை கொலைசெய்த மகன்!

பெற்ற தாயை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மூத்த மகனை வீரகெட்டிய பொலிஸார் இன்று (30.08.2018) கைது செய்துள்ளனர்.

வீரகெட்டிய – ஹக்குருவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் ஹக்குருவெலவில் நேற்று நடைபெற்றுள்ளது. மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட ஒருவர், நேற்றைய தினம் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி மூலம் சந்தேகத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை சட்ட வைத்திய அதிகாரி மூலம் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் சட்ட வைத்திய அறிக்கையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வீரகெட்டிய பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனை கைது செய்துள்ளனர். இந்த நபர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் முன்னுக்குபின் முரணாக இருந்துள்ளளது.

இதனையடுத்து மேலும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், உயிரிழந்த பெண் சமையல் அறையில் உட்கார்ந்து சமைத்துக் கொண்டிருந்த போது, பெண்ணின் மூத்த மகன், பெண்ணை தாக்கி, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததை கண்டறிந்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த பெண்ணின் இளைய மகன், பொலிஸாரிடம் இது சம்பந்தமாக சாட்சியமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணி பிரச்சினை காரணமாக சந்தேக நபர் தனது தாயை இவ்வாறு கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்