தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகித்த நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் போரின் இறுதிக் கணங்கள் தொடர்பான பல உண்மைகள் மறைந்து கிடக்கின்றன என வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காணாமல்போனோர் தொடர்பிலும் அவரின் பல விடயங்கள் உள்ளன எனத் தான் நம்புவதாகவும் அந்த விடயங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அனந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;,
அண்மையில் நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் வெளிநாட்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும் இது ஒரு மோசமான குற்றச் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களின் பின்னர் அவரது வாயிலிருந்து இந்த விடயம் வெளிவந்துள்ளது. அவரிடம் யுத்தம் தொடர்பிலான பல உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. சரணடைந்த விடயம் குறித்தும் ஒரு சில விடயங்களை உதிர்த்துள்ளார்.
எனவே அவருக்கு பல உண்மைகள் தெரியும். காணாமல் போனோர் குறித்த விடயத்தில் முடிச்சை அவிழ்க்க அவரால் முடியுமென நான் நம்புகிறேன். – என்றார்.