சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதும், அந்தப் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபரின் ஊடகப் பேச்சாளர், தர்மசிறி எக்கநாயக்க,
“ பாதுகாப்புச் செயலரின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், இராணுவத்துக்கு எதிராக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
சில ஊடகங்கள் அவரது கருத்தை தவறாக வெளியிட்டதால் தான், தவறான கருத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் படையினரை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிடவில்லை.
எனவே, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரியுள்ள போதிலும், அவரைப் பாதுகாப்பு செயலர் பதவியில் இருந்து, சிறிலங்கா அதிபர் நீக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.